ஊதிய உயர்வு
நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான அகவிலைப்படி (DA) உள்ளிட்ட சில கூடுதல் சலுகைகள் மீண்டுமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகளின் பண்டக சாலை செயலர், கணக்கர், எழுத்தர், காசாளர் ஆகியோருக்கு இந்த உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த ஊழியர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டில் நடைமுறை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஊதியம் அறிவிக்கப்பட்டு, தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை செய்த அரசு சிறப்பு குழுவின் பரிந்துரையின் கீழ், புதிய ஊதிய நிர்ணயம் செய்வதற்கு அனுமதி அளித்து மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் லாபத்தில் இயங்கும் பண்டகச் சாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு 5% எனவும் நஷ்டத்தில் செயல்படும் பண்டகச் சாலை ஊழியர்களுக்கு 3% என்றும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் 2022ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வர உள்ளது. மேலும் இந்த ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படி, பயணப்படி, மருத்துவப்படி, மாற்றுத்திறனாளி போக்குவரத்துப்படி, மருத்துவக் காப்பீட்டு திட்டம் போன்றவற்றையும் செயல்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஊதிய உயர்வு மூலம் லட்சக் கணக்கான ஊழியர்கள் பயனடைய உள்ளனர்.
No comments:
Post a Comment